Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கோவில் நிலத்தில் வணிக வளாகம் டெண்டர் அறிவிப்பு திரும்ப பெறப்படும் - இந்து சமய அறநிலையத்துறை

By VASUKI
15 Feb 2025, 04:34 PM
திருவள்ளுர் பூங்காவனத்தம்மன் கோவில் நிலத்தில், வணிக வளாகம் கட்டுவதற்கு வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பு உடனடியாக திரும்ப பெறப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி தெரிவித்துள்ளது.

திருவள்ளுர் மாவட்டம், புட்லூரில் உள்ள பூங்காவனதம்மன் கோவிலுக்கு சொந்தமாக   2.95ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில்,   வணிக வளாகம் கட்ட கோவிலின் தக்கார் டெண்டர் கோரியுள்ளார்.

இந்த டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் திருவள்ளுரை சேர்ந்த பாலாஜி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 அந்த மனுவில், பக்தர்களின் ஆட்சேபங்களை கருத்தில் கொள்ளாமலும், சட்ட விதிகளை பின்பற்றாமலும் இந்த டெண்டர் கோரப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், கோவிலுக்கு சொந்தமான நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என்பதை மீறி, வணிக வளாகம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதால், இந்த டெண்டருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம், மற்றும் நீதிபதி முகமது ஷபிக் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அறநிலையதுறை தரப்பில், இந்த டெண்டர் அறிவிப்பு உடனடியாக திரும்ப பெறப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.