Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கலைஞர் நினைவிடத்தில் கோயில் கோபுரம்.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம்!

By VASUKI
17 Apr 2025, 03:36 PM
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடத்தில் கோயில் கோபுரம் போல் பூ அலங்காரம் செய்திருப்பதற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வருகிறது. இதனையொட்டி, அமைச்சர் சேகர்பாபு கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது, கருணாநிதியின் நினைவிடம் கோவில் கோபுரம் போல் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ்தள பதிவில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, அமைச்சர் சேகர்பாபு வரம்பு மீறி இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என கட்டமாக தெரிவித்துள்ளார். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.