Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

பட்டியலின மக்கள் வழிபாடு நடத்த உரிமை கோரியதால் நிறுத்தப்பட்ட கோவில் திருவிழா...பதற்றமான சூழலால் போலீஸ் குவிப்பு

By Jayakumar
22 Apr 2025, 02:56 PM
புதிதாக தங்களது கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என பட்டியலின மக்கள் கூறுவது நியாயமற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.
கோவில் திருவிழா

நாமக்கல் அருகே வீசாணத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் திருவிழா நேற்று மாலை தொடங்கியது. இந்த நிலையில், அப்பகுதியை சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்தவர்களும் அந்த கோவில் திருவிழாவை நடத்துவதற்கும் கருவறையின் உள்ளே சென்று வழிபாடு நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறியுள்ளனர்.

இதற்கு மற்றொரு சமூகத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பட்டியலின மக்கள் வழிப்பட மட்டும் தான் அனுமதி உள்ளதே தவிர கோவில் திருவிழா நடத்துவதற்கும் சாமியின் கருவறைக்குள் செல்லவும் அனுமதிக்கமுடியாது எனவும் தெரிவித்தனர்.

பதற்றம்...போலீஸ் குவிப்பு

மேலும் இத்தனை ஆண்டுகளாக கோவிலை கட்டி அதற்கு தங்கள் சமூகத்தினரிடையே மட்டுமே வரி வசூல் செய்து ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்தி வருகிறோம். பட்டியலின மக்கள் வழிபடுவதற்கு அந்த பகுதியிலே கோவில் ஒன்றை கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.ஆனால் புதிதாக தங்களது கோவிலில் வழிபாடு நடத்த வேண்டும் என பட்டியலின மக்கள் கூறுவது நியாயமற்றது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இன்று காலை கோவில் முன்பு இருந்த கம்பத்தை ஒரு தரப்பினர் பிடுங்கி கோவில் கிணற்றில் விட்டு விட்டு தாங்கள் திருவிழா நடத்த வில்லை என கூறிவிட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. இதனையடுத்து அங்கு இரு சமூக மக்களிடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் நாமக்கல் ஏ.எஸ்.பி ஆகாஷ் ஜோஷி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து கோவில் திருவிழா நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் சாந்தி தலைமையில் இரு சமூகத்தில் உள்ள முக்கிய நபர்களை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.