Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அரசு பள்ளியில் மதுபோதையில் மயங்கி விழுந்த ஆசிரியர்.. கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை..!

By VASUKI
08 Jul 2025, 07:15 PM
Government school, drunk, teacher who fainted, education department officials, அரசு பள்ளி, மதுபோதை, மயங்கிவிழுந்த ஆசிரியர், கல்வித்துறை அதிகாரிகள்
மணப்பாறை அருகே அரசுப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் பள்ளி வகுப்பறையில் மதுபோதையில் மல்லாந்து மயங்கிக்கிடந்த சம்பவத்தால் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், உடனடியாக அந்த ஆசிரியரை சஸ்பென்ட் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த இனாம்புதூர் ஊராட்சியில் உள்ள வையமலைபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. 20 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் (வயது 45) கடந்த ஆறு மாதங்களாக ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஆரோக்கியராஜ் நேற்று ( ஜூலை 15 ) ஆம் தேதி மாலை பள்ளிக்கு மது போதையில் வந்து பள்ளியில் உள்ள சேர் மற்றும் டேபிள் ஆகியவற்றை கீழே தள்ளி விட்டதோடு போதை தலைக்கேறி வகுப்பறையிலேயே படுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் மயங்கி கிடப்பதை கண்ட மாணவர்கள் தங்களது பெற்றோர்களிடம் சென்று கூறியதையடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் தண்ணீரை எடுத்து ஆசிரியை முகத்தில் அடித்து அவரை எழுப்பி தெளிய வைத்துள்ளனர்.

இது குறித்து பெற்றோர்கள் அளித்த தகவலின் பெயரில் வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோர்களை சமாதானம் செய்து ஆசிரியரை மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

பரிசோதனையில் ஆசிரியர் மது போதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் மீதான நடவடிக்கைக்கு வட்டார கல்வி அலுவலர் பரிந்துரை செய்ததையடுத்து, மாவட்டக் தொடக்க்கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆசிரியர் ஆரோக்கியராஜை சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டுள்ளனர். மாணவர்களுக்கு கல்வி அறிவை போதிக்கும் ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியர் மது போதையில் மயங்கி கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.