தமிழ்நாடு

ரவுடியிச தடுப்பு நடவடிக்கை.. 150 ரவுடிகளுக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்

By Jayakumar
04 Jun 2025, 10:32 AM
ரவுடியிசத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், பல்வேறு வழக்குகளில் கடந்தாண்டு கைதுசெய்யப்பட்ட 150 ரவுடிகளுக்கு 10 முதல் 12 ஆண்டுகள் வரை நீதிமன்றம் மூலம் சிறை தண்டனை பெற்று தந்ததாக தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
ரவுடியிசத்தை கட்டுப்படுத்தவும் பழிவாங்கும் கொலைகளை குறைக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக மண்டல வாரியாக ரவுடிகளை கண்காணிக்கும் குழுவை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. டிஎஸ்பி தலைமையிலான இந்த குழு வடக்கு, மத்திய, மற்றும் தெற்கு மண்டலங்களில் செயல்பட்டு வருகிறது. ஆணையரகங்களில் துணை ஆணையர் தலைமையில் மற்றும் மாவட்டங்களில் கூடுதல் எஸ்பி தலைமையில் ரவுடிகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளை கண்காணித்து விரைந்து விசாரணை நடத்தி தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையும் தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

நிலுவையில் உள்ள வழக்குளில், முடியும் தருவாயில் இருக்கும் விசாரணை அனைத்தையும் முடித்து தீர்ப்பு பெறும் நிலையில் உள்ள வழக்குகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மட்டும் 376 வழக்குகள் அடையாளம் காணப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் 150 ரவுடிகள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் 2025 வரை 29 முக்கியமான வழக்குகள் தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. இதில் ரவுடிகள் தொடர்பான வழக்குகளும் அடங்கும். குறிப்பாக மேற்கு மண்டலத்தில் ஐந்து வழக்குகளும், மத்திய மண்டலத்தில் ஆறு வழக்குகளும் தெற்கு மண்டலத்தில் 18 வழக்குகளும் தீர்ப்புகள் பெறப்பட்டுள்ளன.

குறிப்பாக தெற்கு மண்டலத்தில் ரவுடிகள் கொலைகள் கருத்தில் கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. ரவுடி கொலைகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மொத்தமாக 18 வழக்குகள் தீர்ப்பு பெறப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. மிகச் சிறந்த வகையில் இது போன்ற வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு தீர்ப்புகள் பெறப்பட்ட காரணத்தினால் கொலை வழக்குகள் மற்றும் ரவுடி பழிவாங்கல் கொலைகள் உள்ளிட்டவை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற நடவடிக்கைகள் பாலியல் தொடர்பான வழக்குகளிலும் மற்ற கொலை வழக்குகளிலும் பின்பற்றப்படுவதாக தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.