Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுப் பயணம்: கட்சித் தொண்டர்களுக்கு கடிதம்!

By VASUKI
03 Sep 2025, 05:26 PM
முதலமைச்சர் ஸ்டாலின், ஜெர்மனி பயணத்தில் ரூ. 7,020 கோடி முதலீடுகளை ஈர்த்து, தனது பயணத்தை விமர்சித்தவர்களுக்குக் கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் லண்டன் ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது பயணத்தை விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்குக் கடிதம்மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜெர்மனியில் தனது பயணத்தை முடித்துக்கொண்டு லண்டன் புறப்பட்ட முதலமைச்சருக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.

ஜெர்மனி பயணத்தின் வெற்றி

ஜெர்மனியின் கொலோன் மற்றும் டசல்டோர்ஃப் நகரங்களுக்குச் சென்ற முதலமைச்சர், உலகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ. உட்பட ஐந்து முக்கிய நிறுவனங்களைச் சந்தித்துப் பேசினார். இந்தப் பயணத்தின்போது, தமிழகத்தில் ரூ. 7,020 கோடி முதலீடுகளுக்கான 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம், சுமார் 15,320 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செப்டம்பர் 2 அன்று, ஜெர்மனியின் என்ஆர்ஆர் (NRW) மாநிலத்தின் மினிஸ்டர்-பிரசிடென்ட் அவர்களையும் சந்தித்துப் பேசி, இரு தரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசித்தார்.

அரசியல் விமர்சனங்களுக்கு முதலமைச்சர் பதில்

இந்த வெளிநாட்டுப் பயணம்குறித்து அரசியல் கட்சிகள் "இது தேர்தலுக்கான பயணம், முதலீடுகள் வராது" என விமர்சனங்கள் முன்வைத்திருந்தன. இதற்குப் பதிலளிக்கும் வகையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது கடிதத்தில், “நமது திராவிட மாடல ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்கத்திலான பொருளாதார வளர்ச்சியுடன், இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது. இந்த முன்னேற்றத்தை மேலும் வலுப்படுத்தி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளர்ச்சி பெறவே இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

திட்டமிட்டபடி ஜெர்மனி பயணம் வெற்றிகரமாக அமைந்த மகிழ்ச்சியுடன் லண்டனுக்குப் புறப்பட்டதாக அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.