தமிழ்நாடு

நாமக்கல்லில் எம்.பி.,வீட்டில் திடீர் தீ விபத்து- அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

By Jayakumar
10 Apr 2025, 05:12 PM
நாமக்கல் கொ.ம.தே.க எம்.பி. வீட்டில் திடீர் தீவிபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் எம்.பி வீட்டில் தீ விபத்து

நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினராகவும், நாமக்கல் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருபவர் மாதேஸ்வரன். இவரது சொந்த ஊர் நாமக்கல் அருகே பொட்டணம் ஆகும். பொட்டணத்தில் உள்ள வீட்டில் இவரது தாய் வரதம்மாள் குடியிருந்து வருகின்றார். நேற்று இரவு வழக்கம் போல் வரதம்மாள் வீட்டில் உள்ள படுக்கையறையில் தூங்கிகொண்டு இருந்துள்ளார். அப்போது நள்ளிரவு திடீரென படுக்கையறையில் தீ பிடித்துள்ளது. அங்கு தூங்கி கொண்டிருந்த வரதம்மாள் வீட்டை விட்டு வெளியே வந்து கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து வீட்டிற்குள் செல்ல முயன்றனர். அதற்குள் வீட்டிற்குள் இருந்த ஏ.சி, மெத்தைகள், டேபிள், சேர் , கபோட் ஆகியவை எறிந்தன. மேலும் வீட்டில் இருந்த ரொக்கப் பணம் 70 ஆயிரம் எரிந்தன. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

அதன் அடிப்படையில் நாமக்கல் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து எரிந்துக்கொண்டிருந்த மெத்தைகள், டேபிள், ஏ.சி எரிந்ததை தண்ணீர் கொண்டு அணைத்தனர். தொடர்ந்து சேந்தமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் படுக்கை அறையில் இருந்த ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இருப்பினும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.