தமிழ்நாடு

காதலிக்க மறுத்த மாணவிக்குக் கத்திக்குத்து- தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவன் வெறிச்செயல்!

By Christon
22 Jan 2026, 01:35 PM
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி வளாகத்தில், சக மாணவியைக் காதலிக்க வற்புறுத்தி மாணவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரி வளாகத்தில், சக மாணவியைக் காதலிக்க வற்புறுத்தி மாணவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருதலைப்பட்சக் காதலால் விளைந்த விபரீதம்

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் என்ற மாணவன், சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறான். இவன் தனது வகுப்பில் பயிலும் 17 வயது மாணவி ஹன்சிகாவை ஒருதலைப்பட்சமாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பலமுறை தனது காதலைத் தெரிவித்தும், அந்த மாணவி அதனை ஏற்க மறுத்து வந்துள்ளார்.

கல்லூரி வளாகத்திலேயே தாக்குதல்

வழக்கம்போல் இன்று கல்லூரிக்கு வந்த மாணவியிடம், ஹர்ஷவர்தன் மீண்டும் தனது காதலை ஏற்குமாறு வற்புறுத்தியுள்ளான். மாணவி திட்டவட்டமாக மறுத்ததால் ஆத்திரமடைந்த ஹர்ஷவர்தன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சக மாணவர்கள் முன்னிலையிலேயே அந்த மாணவியைச் சரமாரியாகக் குத்தியுள்ளான். இதில் மாணவியின் உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டு, அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

மருத்துவமனையில் அனுமதி

கல்லூரி வளாகத்தில் நடந்த இந்தத் திடீர் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக மாணவர்களும் பேராசிரியர்களும், காயமடைந்த மாணவியை உடனடியாக மீட்டனர். முதலில் கணபதி பகுதியில் உள்ள கே.ஜி. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசரச் சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸ் விசாரணை

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி காவல் துறையினர், தாக்குதலில் ஈடுபட்ட மாணவன் ஹர்ஷவர்தனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி வளாகத்திற்குள் கத்தி போன்ற ஆயுதங்கள் எவ்வாறு கொண்டு வரப்பட்டன என்பது குறித்தும், பாதுகாப்புப் குளறுபடிகள் குறித்தும் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.