தமிழ்நாடு

ஆட்சியருக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்த மாணவன்…கடிதத்தை படித்து கண்கலங்கிய ஆட்சியர்

By Jayakumar
17 Jul 2025, 11:12 AM
தன்னை பற்றி மாணவன் எழுதிய கடிதத்துடன் அரசு பள்ளிக்கு வந்த ஆட்சியர், மாணவனின் கடிதத்தை படித்து பார்த்து கண்கலங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வரும் விஜய் என்பவர் புதியதாக நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவராக பொறுப்பேற்றுக்கொண்ட துர்காமூர்த்திக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

ஆட்சியருக்கு கடிதம்

அதில் தாங்கள் மாவட்ட ஆட்சியர் பணிக்கு எவ்வளவு கடினமாக உழைத்து வந்துள்ளீர்கள் என்பதை அறிந்தேன். எனவே தாங்கள் எங்களது பள்ளிக்கு வரவேண்டும் என கோரிக்கை கடிதத்தினை அனுப்பி இருந்தார். ஆட்சியர் துர்காமூர்த்தி பொறுப்பேற்ற 2ம் நாள் மேற்கண்ட மாணவரின் கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்த நிலையில் மாணவன் விஜய்யின் கோரிக்கையை ஏற்று எருமபட்டி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி ஆய்வு மேற்கொள்ள சென்றார்.

கண்கலங்கிய ஆட்சியர்

அப்போது தனக்கு கடிதம் எழுதிய மாணவனின் நினைவு வரவே எருமபட்டியில் உள்ள அரசு அண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று அந்த மாணவனின் வகுப்பறையில் நுழைந்த ஆட்சியர் துர்காமூர்த்தி யார் விஜய் என கேட்டுகொண்ட அவர், கடிதத்தை காட்டி எவ்வாறு என்னை பத்தி தகவல் தெரியும் என கேட்க உடனடியாக விஜய் வாட்ஸ் ஆப் மூலம் தகவல் வந்தது என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஆட்சியர் துர்காமூர்த்தி தன்னை பற்றி மாணவன் விஜய் என்ன எழுதியுள்ளான் என சகமாணவர்களுக்கு படித்து காட்டினார். அப்போது தன்னை பற்றி அழகாக எழுதியுள்ளான் என்றும் சந்தோஷமாக இருக்கிறது என படித்த ஆட்சியர் மாணவனை பாராட்டி நினைவு பரிசை வழங்கிய நிலையில் திடீரென ஏமோசனாகி கண்கலங்கினார்.

மாணவர்களுடன் கலந்துரையாடல்

இதனையடுத்து மாணவர் விஜய்யிடம் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி கலந்துரையாடினார். அப்போது போட்டித்தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள் என கேட்க, ஆங்கிலத்தில் எழுதினேன் என கூறிய நிலையில் தாராளமாக தமிழில் நமது தாய் மொழில் எழுதலாம். நிறைய இந்திய ஆட்சிப் பணியில் தேர்வு பெற்றவர்கள் தனது தாய் மொழியில் எழுதியுள்ளார்கள். அதிலும் தமிழில் எழுதியவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர் எனவும் தனது வாழ்க்கை வரலாற்றையும் தான் எவ்வாறு ஆட்சியராக வந்தேன் என மாவட்ட ஆட்சியர் மாணவர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடல் மிகவும் சுவாரசியமாக இருந்தன. இந்த நிகழ்வின்போது பள்ளியின் ஆசிரியர், ஆசிரியைகள் பலர் உடனிருந்தனர்.