Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

முன்னாள் காதலியை வேவு பார்த்த வழக்கு: டிடெக்டிவ் ஏஜெண்ட் உட்பட 3 பேரை போலீஸ் காவலில் விசாரிக்கத் திட்டம்!

By VASUKI
30 Jul 2025, 09:30 AM
ஓய்வுபெற்ற மாஜிஸ்திரேட்டின் மகளை டிடெக்டிவ் ஏஜெண்ட் வைத்து வேவு பார்த்த வழக்கில் கைதான முன்னாள் காதலன் உட்பட 3 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் 28 வயதுடைய ஓய்வு பெற்ற மாஜிஸ்திரேட்டின் மகள் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஓஎம்ஆர் சாலையில் உள்ள பிரபல கல்லூரியில் பயின்று வந்தபோது, அதே பகுதியில் பிரபல ஷோரூமில் பணியாற்றி வந்த திவாகர் ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பிலிருந்து வந்துள்ளனர். கடந்த 2024 ஆம் ஆண்டு திவாகரின் செல்போனை இளம் பெண் ஆராய்ந்தபோது அதில் திவாகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பது தெரிய வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பின்னர் திவாகருடன் நட்பை முறித்துக் கொண்டு தனியாக இளம் பெண் வசித்து வந்த நிலையில் தொடர்ச்சியாகத் திவாகர் இளம் பெண்ணைக் காதலிக்குமாறு கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் இளம்பெண் தொடர்பைத் துண்டித்துத் தனியாக வசித்து வந்த நிலையில், நுங்கம்பாக்கம் டிபிஐயில் வைத்து ஒரு நாள் இளம்பெண்ணைத் திவாகர் தாக்கியுள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இளம்பெண்ணின் இமெயிலுக்கு ஹேக் செய்வது போல ஒரு மெசேஜ் வந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இது தொடர்பாக எழும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. திவாகர் விட்டுப் பிரிந்த காதலியின் நடவடிக்கையை முழுவதுமாகக் கண்காணிக்க பல செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாகத் திவாகரின் நண்பர் காபி கடை நடத்தி வரும் சக்தி சரவணன் என்பவரிடம் கூறி இளம் பெண் யாருடன் காபி கடைக்கு வருகிறார்? செல்கிறார் உள்ளிட்டவை சிசிடிவி மூலமாகக் கண்காணித்து தகவல் கூறி வந்துள்ளார். இது மட்டுமின்றி இளம்பெண் யாருடன் செல்போனில் தொடர்பு கொள்கிறார்?வாட்ஸ் அப்பில் யாருடன் பேசுகிறார்? மெயில் மூலமாக யாருடன் பேசுகிறார் உள்ளிட்டவை கண்காணிப்பதற்காக நந்தம்பாக்கத்தில் டிடெக்டிவ் சர்வீஸ் நடத்தி வரும் சுரேஷ் ஸ்டாலின் என்பவரை நாடி, அந்தத் தகவல்களையும் பெற்று வந்துள்ளார்.

இதற்காகத் திவாகர் ராஜ் ஆயிரக்கணக்கில் சக்தி சரவணன் மற்றும் சுரேஷ் ஸ்டாலின் ஆகியோருக்கு செலவழித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. ஒரு கட்டத்தில் இளம் பெண்ணின் இமெயிலுக்கு ஹேக் செய்தது போல ஒரு மெசேஜ் வந்ததால் அதை வைத்து இவர்கள் சிக்கி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் உடனடியாகப் போலீசார் இளம்பெண்ணின் முன்னாள் காதலன் தி.நகரை சேர்ந்த திவாகர்ராஜ் (35), காப்பி கடை நடத்தி வரும் சூளைமேட்டை சேர்ந்த சக்தி சரவணன் (35) மற்றும் நந்தம்பாக்கத்தில் டிடெக்டிவ் சர்வீஸ் நடத்தி வரும் டிடெக்டிவ் ஏஜென்ட் சுரேஷ் ஸ்டாலின் (வயது 54) ஆகிய மூவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட டிடெக்டிவ் ஏஜென்ட் சுரேஷ் ஸ்டாலின் முன்னதாகச் சென்ட்ரல் ஏஜென்சியில் பணியாற்றி வந்ததால் அதை வைத்து இளம் பெண்ணின் கால் டீடெயில்ஸ் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட தகவல்களைத் தெரிவித்து வந்ததும் போலீசார் தெரிவித்துள்ளனர். சுரேஷ் ஸ்டாலினுக்கு உதவிய நபர் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் கைதான 3 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது.