Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சிலர் மலிவான அரசியல் செய்கின்றனர்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

By Christon
14 Sep 2025, 02:55 PM
"சிலர் எதையும் தெரிந்து கொள்ளாமல் மலிவான அரசியல் செய்கின்றனர்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் ரூ.2,885 கோடியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2 லட்சத்து 32 ஆயிரத்து 13 பயனாளிகளுக்கு ரூ.2,053 கோடியில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இபிஎஸ்-ஐ சாடிய முதல்வர்

விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "தமிழகத்தை விட்டு தொழில் நிறுவனங்கள் ஓடிப்போக காரணமாக இருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அவர் நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஈர்த்ததாகச் சொன்ன முதலீடுகளில் பாதி கூட வரவில்லை; வெளிநாட்டுப் பயணங்களில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் கால்வாசி கூட வரவில்லை. ஆனால், நாம் ஒப்பந்தம் போட்டதில் 77% நிறுவனங்கள் தமிழகத்திற்கு வந்துள்ளன. அதிமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகளைப் பழனிசாமி பட்டியலிட முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வு விவகாரம் - திமுக நாடகம் ஆடவில்லை

நீட் தேர்வு விவகாரத்தில் அதிமுகவை போல் திமுக அரசு நாடகம் ஆடவில்லை எனக் குறிப்பிட்ட முதல்வர், "நீட் தேர்வுக்குத் தடை வாங்க முடியவில்லை என்பதை நாங்கள் மறுக்கவில்லை. மத்தியில் ஒருநாள் தமிழகத்துக்கான நீதியைத் தரும் ஆட்சி அமையத்தான் போகிறது. நாட்டு மக்களுக்கு எதிரான மத்திய பா.ஜ.க அரசின் ஆட்சி நெடுநாள் நீடிக்காது. அப்போது நமது கோரிக்கை நிறைவேறும்.

திமுகவின் 500 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். திமுக அரசின் சாதனைகள் சிலருக்கு தெரியவில்லை. இங்குள்ள சிலர் எதையும் தெரிந்து கொள்ளாமல் மலிவான அரசியல் செய்கின்றனர். 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம். மீண்டும் திமுகவை ஆட்சியில் அமர்த்த மக்கள் தயாராக உள்ளனர். திராவிட மாடல் மக்களாட்சி காலமெல்லாம் தொடரும்” என்று அவர் பேசினார்.

கிருஷ்ணகிரிக்கு 5 புதிய அறிவிப்புகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு ஐந்து புதிய அறிவிப்புகளையும் முதல்வர் வெளியிட்டார். அதன் விவரம் பின்வருமாறு:

* அஞ்செட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும்.

* கெலமங்கத்தில் புறவழிச்சாலை அமைக்க விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படும்.

* ஒசூரில் எல்சி 104 ரயில்வே கேட் பகுதியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

* ரூ.12 கோடியில் புதிய சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

* ஓசூர் மருத்துவமனையைத் தரம் உயர்த்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்" என்றார்.