Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கடத்திவரப்பட்ட  சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள்-திருப்பி அனுப்பிய சுங்கத்துறை

By Jayakumar
05 Dec 2024, 11:05 AM
மலேசிய நாட்டில் இருந்து சட்ட விரோதமாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த 2  பயணிகளையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலேசியாவில் இருந்து கடத்திக் வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 5200  சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் சுங்கத்துறையினர் திருப்பி அனுப்பினர்.

சென்னை அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரில் இருந்து விமானம் வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளை முழுமையாக சோதனை நடத்தினார்கள்.அப்போது சென்னையைச் சேர்ந்த ரமேஷ் ஆகாஷ் (29), தமிம் அன்சாரி முகமது ரஃபிக்(30) ஆகியோர் சுற்றுலா விசாவில் சென்றுவிட்டு திரும்பி வந்தனர். 2 பேர் மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். அப்போது 2 பேரும் முன்னுக்குப் பின் முரணாக பேசினார்கள்.

இதை அடுத்து உடமைகளை சோதித்த போது அட்டைப்பெட்டிகளுக்குள் சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் ஏராளமாக உயிருடன் இருந்ததை கண்டுபிடித்தனர்.அட்டைப் பெட்டிக்குள் சுமார் 5,200 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் இருந்தன.அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் என்று கூறப்படுகிறது.இதையடுத்து சென்னை பெசன்ட் நகரில் உள்ள மத்திய வனத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து கடத்தல் பயணிகளிடம் விசாரித்தனர்.

சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகள் குளிர் பிரதேசமான தாய்லாந்து, மலேசியா, ஐரோப்பிய நாடுகள் போன்ற இடங்களில் அதிகமாக காணப்படுகின்றன. இவைகளை பெரிய பங்களாக்களில், அலங்கார தொட்டிகளில் வைத்து வளர்த்து வருகின்றனர். இவைகள் மருத்துவ குணங்கள் உடையவை. எனவே மருந்துகள் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறபடுகிறது. இவைகளை இந்தியாவுக்கு அனுமதித்தால், வெளிநாட்டு நோய்க் கிருமிகளால் நமது நாட்டில் உள்ள விலங்குகள், பறவைகள், பாதிக்கப்படலாம். எனவே அனுமதிக்க முடியாது. திருப்பி அனுப்ப சுங்கத்துறை அதிகாரிகளும், மத்திய வனத்துறை  குற்றப்பிரிவு அதிகாரிகளும் முடிவு செய்தனர்.  5200 சிவப்பு காது அலங்கார நட்சத்திர ஆமைகளை, மீண்டும் மலேசியா நாட்டிற்கு திருப்பி  விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

மலேசிய நாட்டில் இருந்து சட்ட விரோதமாக, சென்னைக்கு கடத்திக் கொண்டு வந்த 2  பயணிகளையும், சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் மலேசியாவில் இருந்து வன உயிர் இனங்களை கடத்திக் கொண்டு வந்த, பயணி ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து, சிறையில் அடைத்து ஜாமீனில் வெளியில் வர முடியாத படி, காப்பி போசா சட்டத்திலும் கைது செய்துள்ளனர். அதைப்போல் இந்த 2  பயணிகள் மீதும், கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.