Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

“SIR நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும்”- அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

By Christon
02 Nov 2025, 01:24 PM
எஸ்ஐஆர் தொடர்பான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் நிறுத்த வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் வரும் 4 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளை எதிர்த்து, இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உட்பட 20 கட்சிகள் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கையை (Special Intensive Revision - SIR) தி.மு.க. எதிர்ப்பதற்கான காரணங்களை முதல்வர் ஸ்டாலின் கூட்டத்தில் விளக்கினார்.

"நேர்மையான தேர்தல் நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம் என்பதை யாரும் மறுக்கவில்லை, ஆனால் அதற்காக உரிய கால அவகாசத்தைக் கொடுக்க வேண்டும். பதற்றமில்லாத சூழலில் அதைச் செய்ய வேண்டும். தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பாக முழுமையான திருத்தப் பணிகள் செய்ய நினைப்பது உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம்.

மக்கள் வாக்குரிமையைப் பறிக்கும் விதமாகவும், அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நடைபெற்றன. அது போல தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலும் நடைபெற உள்ளது.

இதற்கு எதிராக தமிழ்நாடு தனது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டியது முக்கிய தேவையாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஜனநாயகக் கடமையாற்ற இந்தக் கூட்டம் நடக்கிறது. மக்களின் உரிமைகளைக் காக்க, ஜனநாயகக் குரலைக் காக்க வரைவு தீர்மானத்தை முன்வைத்துள்ளோம்" என்று அவர் பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், "ஜனநாயக, சட்டவிரோத SIR நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்க வேண்டும்" என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை நிறுத்தவில்லை என்றால், அனைத்துக் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு என்றும் தீர்மானத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.