Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

திருவண்ணாமலையில் அதிர்ச்சி.. இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் கைது!

By Christon
30 Sep 2025, 01:56 PM
திருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் செய்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு காவலர்களை, போலீசார் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் குற்றச் சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி

திருவண்ணாமலை அடுத்த ஏந்தல் புறவழிச் சாலையில் நேற்று இரவு, ஆந்திராவில் இருந்து லோடு வாகனத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஓட்டுநர் உட்பட மூன்று பேர் வந்துள்ளனர்.

அப்போது, புறவழிச் சாலையில் இரவு ரோந்துப் பணியில் இருந்த கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் மற்றும் சுரேஷ்ராஜ் இருவரும் அந்த வாகனத்தை வழிமறித்துச் சந்தேகம் இருப்பதாகக் கூறி வாகனத்தில் இருந்தவர்களைக் கீழே இறங்க வைத்து விசாரித்துள்ளனர்.

விசாரணையின்போது, 18 வயது இளம்பெண்ணை மட்டும் இருவரும் அடித்துத் தரதரவென இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு இரண்டு காவலர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.

போலீசார் விசாரணை

இன்று அதிகாலை 4 மணியளவில் அங்கு வந்த ஊர் மக்கள் இளம்பெண்ணை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாகத் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தத் தகவலை அறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் மற்றும் உதவிக் காவல் கண்காணிப்பாளர் சதீஷ் ஆகியோர் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் நேற்று இரவு நடந்த சம்பவங்கள் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

பாலியல் வன்கொடுமை செய்த இருவரும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஐந்து காவல் ஆய்வாளர்கள் உட்படப் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு காவலர்களையும் போலீசார் கைது செய்து, அவர்களை ரகசிய இடத்தில் வைத்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.