தமிழ்நாடு

கோவிலில் இருந்த சிவலிங்கம் சிலை உடைப்பு..இந்து அமைப்பினர் கூடியதால் பரபரப்பு

By Jayakumar
01 Jul 2025, 06:26 PM
இது குறித்து தகவல் அறிந்து துடியலூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் கோவிலில் இருந்த சிவலிங்கம் சிலை உடைக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்த இந்து முன்னணியினர் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாமி சிலைகள் உடைப்பு

கோவையில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாமி சிலைகள் உடைக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பக்தர்களும், இந்து அமைப்பினரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் விநாயகர், மூஞ்சூறு, ராகு மற்றும் கேது சிலைகள் உடைக்கப்பட்டன. அதில் ஒரு வடமாநில இளைஞர் மதுபோதையில் உடைத்ததாக காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்து அமைப்புகள் கூடியதால் பரபரப்பு

இந்நிலையில் தற்பொழுது துடியலூர் ரயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள விநாயகர் கோவில் பகுதியில் பழமை வாய்ந்த சிவலிங்கம் சிலை உடைக்கப்பட்டு உள்ளது. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்களும், பொதுமக்களும் இதுகுறித்து இந்து அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் இந்து அமைப்பினர் அங்கு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்து துடியலூர் காவல் துறையினர் சம்பவ இடத்தில் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிலையை மர்ம நபர்கள் உடைத்தார்களா? மத கலவரத்தை தூண்டும் விதமாக சமூக விரோதிகள் இந்த செயலில் ஈடுபட்டனரா? எனவும் மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.