Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சிறுவனுக்கு பாலியல் தொல்லை - ஓட்டல் அதிபர் மகன் உட்பட 2 பேர் போக்சோவில் கைது!

By VASUKI
27 Apr 2025, 12:58 PM
திருச்சியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் அதிபர் மகன் உட்பட 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருச்சி அடுத்த நாகமங்கலத்தைச் சேர்ந்தவர் நவீனா ( 28 ) இவருக்கு 4 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. நவீனா கர்ப்பமாக இருந்த காலத்திலேயே , கணவர் பிரிந்து சென்று விட்டார். இந்த நிலையில் நவீனாவும் அவரது 4 வயது ஆண் குழந்தையும் வசித்து வருகின்றனர். நவீனா கே.கே நகர் பகுதியில் உள்ள சுவை என்னும் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்பொழுது அந்த ஹோட்டல் உரிமையாளரான திருச்சி ஏர்போர்ட் வசந்த நகரை சேர்ந்த பஷீர் மகன் நாசர் அலி (30) என்பவருக்கும் நவீனாவுக்கு இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் அடிக்கடி நவீனா வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நாசர் அலி, நவீனா வீட்டில் நவீனாவுடன் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவரது ஐந்து வயது மகனை அவரது நண்பரான நாகமங்கலம் செவன் பட்டியைச் சேர்ந்த காளிமுத்து மகன் வேலுமணி ( 29 ) என்பவனுடன் சேர்ந்து காரில் சுரக்குடி பட்டி பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்பொழுது நாசர் அலியும், வேலுமணியும் மது அருந்ததியோடு அந்த சிறு குழந்தையின் வாயில் கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றி உள்ளனர். பின்னர் சிறுவனை அடித்து துன்புறுத்தியதோடு அந்த குழந்தையை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். இந்த நிலையில் குழந்தையை காருக்குள் வைத்து அடித்து துன்புறுத்துவதை பார்த்த சொரக்குடிப்பட்டி பகுதி மக்கள் யாரோ ஒரு குழந்தையை கடத்தி வந்துள்ளார்கள் என நினைத்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்பொழுது அவர்களிடமிருந்து வேலுமணி தப்பி ஓடியுள்ளார்.

அதிக போதையில் இருந்ததால் நாசர் அலி தப்பி ஓட முடியாமல், சிக்கி கொண்டார். பின்னர் நாசர் அலிக்கு அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர். இது சம்பந்தமாக உடனடியாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி நாசர் அலியை அவர்களிடம் இருந்து மீட்டு வந்து நாசர் அலி மற்றும் வேலுமணி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர். இந்த நிலையில் வேலுமணியை கைது செய்ததோடு இருவரையும், திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் போலீசார் இருவரையும், நீதிமன்ற உத்தரவின் படி போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.