தமிழ்நாடு

திருப்பரங்குன்றம் விவகாரம்: அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு தடை!

By Christon
08 Apr 2026, 01:38 PM
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த வேண்டாம் என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார், பரமசிவம், அரசபாண்டி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் கடந்த ஆண்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தீப கார்த்திகை நாளான்று (டிச. 3-2025) மலை மீதுள்ள தூணிலும், வழக்கம் போல பிற இடங்களிலும் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த ஆண்டு, டிசம்பர் 1-ஆம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததையொட்டி, தீப கார்த்திகைக்கு மறுநாளான டிசம்பர் 4-ஆம் தேதியன்று தூணில் தீபம் ஏற்ற வேண்டுமென டிசம்பர் 3-ஆம் தேதி உத்தரவிட்டார்.

ஆனால், நீதிமன்றத்தின் இந்த இரு உத்தரவுகளும் நிறைவேற்றப்படவில்லை. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர், துணை ஆணையர், கோயில் நிர்வாகத்தினர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி, ராம. ரவிக்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி சுவாமிநாதன் மலை உச்சி தீபத்தூண் அருகே மலர் தூவி வழிபட 5 பேரை அனுமதிக்க வேண்டும் என மற்றொரு உத்தரவு பிறப்பித்தார். இதற்கு எதிராக கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம், மதுரை போலீஸ் கமிஷனர் தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 08) மதுரை உயர்நீதிமன்றம் கிளை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மலை உச்சியில் 5 பேர் கொண்ட குழு வழிபட அனுமதிக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவிற்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது. திருப்பரங்குன்றம் தொடர்பான அனைத்து வழக்கையும் ஜூன்4ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.