Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை? லிஸ்ட் இதோ!

By JANANI
16 Oct 2024, 01:38 PM
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உட்பட 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை உட்பட 12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் 42 இடங்களில் கனமழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இன்றும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

இதனிடையே அதிகனமழை எச்சரிக்கை காரணமாக, சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மற்றும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா அலுவலகங்கள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை அடுத்து தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே, மீட்பு பணிக்கு முப்படைகளும் தயார் நிலையில் உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. வடதமிழகம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயாராக வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் படிக்க: காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது, எங்கே கரையை கடக்கிறது.. வானிலை மையம் கொடுத்த தகவல்

மேலும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள தாம்பரம் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளதாகவும், அரக்கோணம் கப்பல் படை வீரர்கள், மத்திய கடலோர காவல் படையினரும் படகுகளுடன் தயாராக உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையின் 13 கம்பெனிகளுக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.