Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஈவெரா மணியம்மையார் சிலைக்கு மனுக்கொடுத்து தூய்மைப் பணியாளர்களின் நூதனப் போராட்டம்: சென்னை வேப்பேரியில் பரபரப்பு!

By VASUKI
12 Sep 2025, 03:21 PM
தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மைப் பணியாளர்கள் ஈவெரா மணியம்மையார் சிலைக்கு மனு கொடுத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி நிரந்தரம், தனியார்மயமாக்கலுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் பல நாட்களாகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள ஈ.வெ.ரா. மணியம்மையார் சிலைக்கு மனு கொடுத்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களைக் காவல்துறையினர் குண்டு கட்டாகக் கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தனியார்மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஐந்து நாட்களாகப் பல்வேறு போராட்டங்களை அவர்கள் நடத்தி வருகின்றனர்.

நூதனப் போராட்டம் மற்றும் கைது:

கடந்த நான்கு நாட்களாக 13 தூய்மைப் பணியாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று ஐந்தாவது நாளாகப் போராட்டம் தொடர்ந்தது. இதில் 10 தூய்மைப் பணியாளர்கள், வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகம் அருகே உள்ள ஈ.வெ.ரா. மணி அம்மையார் சிலைக்கு மனு அளித்து, தங்கள் குறைகளைத் தெரிவிக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்து, காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

போலீசார் மீது குற்றச்சாட்டு:

கைது செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பேசுகையில், கடந்த நான்கு நாட்களாக நாங்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், எங்களை ஒவ்வொரு முறையும் கைது செய்து சமுதாயக் கூடங்களில் அடைக்கும்போது, கழிப்பறையில் வைத்துக் கொடுமைப்படுத்துகின்றனர். ஆபாச வார்த்தைகளால் பேசி எங்களை அவமானப்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டினர்.

தங்கள் கோரிக்கைகளான பணி நிரந்தரம் மற்றும் தனியார்மயமாக்கல் முடிவை அரசு கைவிடும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.