தமிழ்நாடு

ரூ.35 லட்சம் நில விவகாரம்.. மன்சூர் அலிகான் மகன் தகராறு.. போலீசார் விசாரணை!

By Jayakumar
25 Jul 2025, 12:02 PM
நடிகர் மன்சூர் அலிகான் நிலத்திற்காக்நிலம் வாங்குவதற்காக ரூ. 35 லட்சத்தை வாங்கி விட்டு இடத்தை தரவில்லை இடத்தின் உரிமையாளரிடம் நடிகர் மன்சூர் அலிகானின் மகன் உள்ளிட்டோர் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் மன்சூர் அலிகான் காவல் நிலையத்திற்கு வந்து விளக்கம் அளித்த நிலையில், நீதிமன்றம் மூலம் தீர்த்து கொள்ளும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை மண்ணடி மரைக்காயர் லெப்பை தெருவைச் சேர்ந்தவர் வரிசைக்கனி. இவருக்கு சொந்தமான இடம் சென்னை வடபழனி பகுதியில் இருக்கிறது 4290 சதுர அடி கொண்ட அந்த இடத்தை திரைப்பட வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் வாங்க முடிவு செய்ததாக தெரிகிறது.

இதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகர் மன்சூர் அலிகான் முன்பணமாக ரூ. 35 லட்சம் வரிசைக்கனிக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக அந்த இடத்தையும் தரவில்லை, வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் நடிகர் மன்சூர் அலிகான் தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று நடிகர் மன்சூர் அலிகானின் மகனும் நடிகருமான அலிகான் துக்ளக் மற்றும் 6 பேர் மண்ணடியில் உள்ள வரிசைக்கனி வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து வரிசைக்கனி வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அலிகான் துக்ளக் மற்றும் 6 பேரை பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். மேலும் இரவு நடிகர் மன்சூர் அலிகானும் காவல் நிலையத்திற்கு வந்து, இந்த பிரச்சினை குறித்து போலீசிடம் விளக்கம் அளித்தார்.

வரிசைக்கனியிடமும் விசாரணை செய்த நிலையில், அப்போது மன்சூர் அலிகான் புகார்தாரரிடம் முறையாக பேசவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பண பிரச்னையை நீதிமன்றம் மூலம் தீர்வு காணும்படி வடக்கு கடற்கரை போலீசார் அறிவுறுத்தி சிஎஸ்ஆர் வழங்கி அனுப்பி வைத்தனர்.