ஏடிஎம் இயந்திரத்தில் நூதன முறையில் திருடி வந்த கான்பூர் கொள்ளைக் கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் திருடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த கும்பல் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.
நூதன முறையில் கொள்ளை
சென்னை ஜெ.ஜெ. நகர் பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்தில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இரவு நேரத்தில் ஏடிஎம்-க்கு வந்த இருவர், பணம் வெளியே வரும் பகுதியில் உள்பக்கமாக ஒரு அலுமினிய தகட்டை வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
அதன்பிறகு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள், ஏடிஎம் கார்டை சொருகிப் பணம் எடுக்க முயன்றபோது, பணம் வெளியே வரவில்லை. ஆனால், அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், வங்கிக்குத் தகவல் தெரிவித்தனர்.
சிசிடிவி காட்சிகள் அம்பலப்படுத்திய உண்மை
தொடர்ச்சியாகப் புகார்கள் வந்ததையடுத்து, வங்கி கிளை மேலாளர் ஏடிஎம் மையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போதுதான், பணம் வெளியே வரும் இடத்தில் அலுமினிய தகடு வைத்து, வாடிக்கையாளர்கள் எடுக்கும் பணத்தை கொள்ளையர்கள் திருடுவது தெரியவந்தது.
சிசிடிவி காட்சிகளின் ஆதாரத்துடன் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சிவா என்பவரைக் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், கான்பூரில் உள்ள சர்சால் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல் இதே பாணியில் பல கொள்ளைகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்தக் கும்பல் சென்னையில் மட்டும் நான்கு எஸ்பிஐ ஏடிஎம்களில் இந்த நூதன திருட்டை அரங்கேற்றியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளையர்கள், ஏடிஎம் இயந்திரத்தின் கீழ்ப் பகுதி கதவு சுலபமாகத் திறக்கும் வகையில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதைக் கண்டறிந்து கைவரிசை காட்டியுள்ளனர். கைதான சிவாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள மற்ற கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.