Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

வள்ளியூரில் நடந்த சாலை விபத்து...பலி எண்ணிக்கை 7ஆக அதிகரிப்பு

By Jayakumar
28 Apr 2025, 07:14 AM
சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் நலம் விசாரித்து உரிய சிகிச்சை அளிக்க கேட்டு கொண்டார்.
கார் மோதி விபத்து

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் கீழுர் தேசிய நெடுஞ்சாலையில் நெல்லையிருந்து, நாகர்கோவில் நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் இரண்டு வயது குழந்தை, இரு பெண்கள் உள்பட 4 பேர் குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது, வள்ளியூர் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்புக் கட்டையில் மோதி எதிர் திசையில் நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், காரில் பயணித்த 2 வயது குழந்தை, ஒரு பெண் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 6 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு வந்த நாங்குநேரி போலீஸார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு, ஒரு பெண் உயிரிழந்தார். இதனால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.

பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு

இந்த நிலையில் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்ற கன்னம்குளம் பகுதியை சேர்ந்த மில்கிஸ் வரும் வழியில் உயிரிழந்துள்ளார்.மேலும் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு சிறுமியும் டக்காமாள்புரத்தை சேர்ந்த தனிஸ்லாஸ் என்பவரும் உயிரிழந்தனர். இதையடுத்து பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்