Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

17 வயது சிறுமியை திருமணம் செய்த மாணவன்.. சினிமா பாணியில் பெண்ணை கடத்திய உறவினர்கள்

By nagalekshmi
18 Apr 2025, 07:34 AM
கரூரில் 19 வயது கல்லூரி மாணவன் 17 வயது சிறுமியை திருமணம் செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற ஆம்னி வேனை சினிமா பாணியில் அடித்து நொறுக்கி சிறுமியை கடத்தி சென்ற உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உடையாபட்டி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். அம்மாபேட்டையைச் சேர்ந்த கல்லூரியில் படிக்கும் 19 வயது மாணவனும் பள்ளி சிறுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்ய பொற்றோர்கள் முடிவெடுத்த நிலையில் இச்சம்பவம் குறித்து அச்சிறுமி தனது காதலனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

சிறுமியின் ஊருக்கு சென்ற மாணவன் அவரை அழைத்துக் கொண்டு அய்யர்மலைப் பகுதியில் உள்ள ஒரு கோயிலில் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவன் தனது பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்து அவர்கள் இருவரையும் தோகைமலை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது குளித்தலை- மணப்பாறை சாலையில் மேடு என்ற இடத்தில் சிறுமியின் உறவினர்கள் மாணவன் மற்றும் அவரது உறவினர்கள் சென்று கொண்டிருந்த வேனை வழிமறித்து அடித்து நொறுக்கினர்.

பின்னர் மாணவன் மற்றும் அவரது உறவினர்களை தாக்கி சிறுமியை மீட்டு சென்றுள்ளனர். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தோகைமலை போலீசார் காயம் அடைந்த கல்லூரி மாணவன் மற்றும் அவரது சகோதரனை தோகைமலையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மாணவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுமியின் உறவினர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.