Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அதிகனமழையினால் நீலகிரியில் ரெட் அலர்ட்.. சுற்றுலாத்தலங்கள் மூடல்..!

By VASUKI
27 May 2025, 02:36 PM
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. இந்த நிலையில், உதகை, குந்தா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கூடிய அதிக கன மழை பெய்து வருகிறது. நேற்று மட்டும் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 25 செண்டிமீட்டர் மழையும், எமரால்டு பகுதியில் 13.2 செ.மீ மழையும், குந்தாவில் 10.9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கல்லட்டியில், உதகை செல்லக்கூடிய சாலைகளில் மரங்கள் மற்றும் பாறைகள் உருண்டும் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், பலத்த காற்று வீசுவதால் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தும், டிரான்ஸ்பார்மர் பழுதாகியும் மின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அதியாவசிய தேவைகளுக்கு கூட வெளியே செல்ல முடியாமல் கிராம மக்கள் தவிர்த்து வருகின்றனர்.

அதேபோல், உதகை - மசினகுடி செல்லும் சாலையில் 2 இடங்களில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், இருமார்க்கங்களிலும் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் ராட்சத பாறைகளை அகற்றி போக்குவரத்து சீர்செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, மாவட்டத்தில் உள்ள லேம்ஸ்ராக், டால்பின் நோஸ், கேத்தரின் நீர் வீழ்ச்சி உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, நெல்லை, தேனி, தென்காசியில் மிக கனமழையும், திருப்பூர் திண்டுக்கல், கன்னியாகுமரியில் கனமழையும் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.