Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

நில அபகரிப்பு புகாரில் ரமேஷ் சங்கர் சோனாய்க்கு நிபந்தனை ஜாமீன் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

By VASUKI
06 Dec 2024, 04:54 PM
நடிகை கவுதமி அளித்த நில அபகரிப்பு புகாரில் கைது செய்யப்பட்ட ரமேஷ் சங்கர் சோனாய் என்பவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகை கவுதமி அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்ட நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷ் சங்கர் சோனாய் (வயது 55) என்பவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல நடிகை கவுதமி,  தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனக்கு சொந்தமான சொத்துக்களை  விற்பதற்காக சினிமா தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான C.அழகப்பன் என்பவரை பவர் ஆஃப் அட்டர்னியாக நியமித்திருந்தார்.

 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சொத்தை விற்ற அழகப்பன், செங்கல்பட்டு மாவட்டம் நீலாங்கரையில் வேறு சொத்தை வாங்கி, அதனை  கவுதமி பெயரிலும், தனது மனைவி  பெயரிலும் பதிவு செய்துள்ளார்.

இதுதொடர்பாக கவுதமி அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், அழகப்பன், நாச்சல், இவர்களது மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, அழகப்பனின் சகோதரர் K.M.பாஸ்கர், ரமேஷ் சங்கர் சோனை ஆகிய 6 பேரை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்தாண்டு கைது செய்தனர்.

 கைது செய்யப்பட்ட ரமேஷ் சங்கர் சோனை, ஜாமீன் கோரி தாக்கல்  செய்திருந்த மனு நீதிபதி ஏடி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது ரியாஸ், நீதிமன்றம் விதிக்கக்கூடிய அனைத்து நிபந்தனைகளுக்கும் கட்டுபட தயாராக இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

புகார்தாரரான கவுதமி தரப்பில், மனுதாரருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து,  சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் முன், தினமும் ஆஜராகி, நான்கு வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும்  என்ற நிபந்தனையுடன், ரமேஷ் சங்கர் சோனாய்-க்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.