இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஜனவரி 9 ஆம் தேதி முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை
குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக, ஜனவரி 9 ஆம் தேதி மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் காரைக்கால் பகுதிக்கும் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கன முதல் மிகக் கனமழை எச்சரிக்கை
ஜனவரி 10 ஆம் தேதி அன்று சில கடலோர மாவட்டங்களுக்கு மிகக் கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 11: கனமழை தொடரும்
மேலும், ஜனவரி 11 ஆம் தேதியன்றும் தமிழகத்தின் வட மாவட்டங்கள் உட்படப் பல பகுதிகளில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.