தமிழ்நாடு

காவல் உதவி செயலியை அதிகம் பயன்படுத்தும் பொதுமக்கள்: தமிழக காவல்துறை தகவல்!

By VASUKI
08 Aug 2025, 01:44 PM
தமிழ்நாடு காவல்துறையின் 'காவல் உதவி' செயலி, பொதுமக்கள் பாதுகாப்புக்காக விரைவான உதவியை வழங்கும் முன்னணி தொழில்நுட்ப சேவையாக உள்ளது. இதில் கடந்த 3 ஆண்டுகளில் 8.45 லட்சம் பேர் பயன்படுத்தி, 1.17 லட்சம் பேருக்கு உதவி கிடைத்துள்ளதாகத் தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல் உதவி செயலியின் அவசியம்:

தொழில்நுட்பம் வளர வளர அதற்கு ஏற்றவாறு பாதுகாப்பு அம்சங்களையும் காவல்துறையினர் அதிகரித்து வருகின்றனர். ஆபத்து ஏற்பட்டால் '100' என்ற எண்ணிற்கு அழைத்துப் புகார் அளிக்கும் முறையிலிருந்து, ஆபத்தில் இருப்பவர்கள் இன்னும் விரைவாகவும் எளிதாகவும் உதவி பெறுவதற்காகக் காவல் உதவி செயலி உருவாக்கப்பட்டது. பெண்களின் பாதுகாப்புக்காகப் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தச் செயலி, தற்போது அனைத்துப் பொதுமக்களுக்கும் பயனுள்ள வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

செயலியின் சிறப்பம்சங்கள்:

இந்தச் செயலியைச் செல்போனில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால், வெறும் மூன்று முறை செல்போனைக் குலுக்கினால் போதும், அந்த நொடியே காவல்துறையினருக்கு ஆபத்தில் இருப்பதை உணர்த்தி உதவி கேட்க முடியும். இவ்வாறு தகவல் கிடைத்தவுடன், ஆபத்தில் சிக்கியிருக்கும் நபரைக் காவல் அவசர உதவி மையத்தினர் உடனடியாகத் தொடர்புகொள்வர். அதேநேரம், செல்போனில் ஜி.பி.எஸ். மற்றும் டேட்டா சேவை இருந்தால், இருப்பிடத் தகவல் மற்றும் சுற்றுச்சூழல் நிலவரம் தொடர்பான 15 வினாடிகள் காணொளியைச் செல்போன் கேமரா மூலமாகக் காவல் அவசர உதவி மையம் பெற முடியும்.

செல்போனில், காவல் உதவி செயலி இயக்கத்தில் இருந்தால், நெட்வொர்க் மற்றும் டேட்டா சேவை துண்டிக்கப்பட்ட நிலையிலும், பிரச்சினைக்குரிய நபரைக் காவல் அவசர உதவி மையத்தினர் 30 முதல் 45 நிமிடங்கள்வரை கண்காணிக்க முடியும். மேலும், இணைய சேவை (டேட்டா) மற்றும் நெட்வொர்க் துண்டிக்கப்பட்ட நிலையிலும், செயலியில் உள்ள அவசரகால சிவப்பு பட்டனை அழுத்துவதன் மூலம் கடைசியாக இருந்த இருப்பிடத் தகவல்களைக் காவல் அவசர உதவி மையத்திற்கு எஸ்.எம்.எஸ். செய்ய முடியும்.

பயனாளர்களின் எண்ணிக்கை:

தற்போது இந்தச் செயலியைக் கடந்த மூன்று வருடங்களில் 8 லட்சத்து 45 ஆயிரத்து 43 பேர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலமாக, ஒரு மாதத்தில் 28 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்யும் வகையில் அதிக நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலியைப் பயன்படுத்தி சுமார் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 849 சிக்னல்கள் மூலம் காவல்துறையினருக்கு உதவி கேட்டுள்ளனர். அதில் 15 ஆயிரத்து 917 பேருக்கு நேரடியாகச் சென்று பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து இந்தச் செயலியை மேம்படுத்தி, தொழில்நுட்ப ரீதியாகப் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.