தமிழ்நாடு

பிரேமலதா வருகை: கொடியை அகற்றிய நெடுஞ்சாலைத்துறையினர்- வாக்குவாதம் செய்த தேமுதிகவினரால் பரபரப்பு

By Jayakumar
07 Aug 2025, 03:28 PM
திருப்பத்தூருக்கு பிரேமலதா விஜயகாந்த் வருகையை முன்னிட்டு சென்டர் மீடியனில் கட்டப்பட்டிருந்த கொடியை நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் மக்களைத் தேடி மக்கள் தலைவன் கேப்டன் என்ற பெயரில் யாத்திரை சூறாவளி சுற்றுப்பயணம் நடைபெற்று வருகிறது.

பிரேமலதா சுற்றுப்பயணம்

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு கேப்டனின் ரத யாத்திரை வந்துள்ளது. மேலும் இன்று மாலை 3 மணி அளவில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று வருகை புரிந்து திருப்பத்தூர் மற்றும் கந்திலி சுற்று வட்டார பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் உள்ளார்.

இதன் காரணமாகத் திருப்பத்தூர் நகர் பகுதிகளில் திருப்பத்தூர் வழியாகக் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் சென்ட்ர்மீடியனில் தங்களது கட்சி கொடியைக் கட்டி இருந்தனர்.இதனை அறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சஞ்சிவ் சம்ப இடத்திற்கு வந்து சென்டர் மீடியனில் இருந்த தேமுதிக கொடிகளை அகற்றியுள்ளார்.

போலீசாருடன் வாக்குவாதம்

இதனை அறிந்த திருப்பத்தூர் நகர செயலாளர் மதன் ராஜ் நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் தேமுதிகவினர் ஒன்றிணைந்து திருப்பத்தூர் வழியாகக் கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் சாலை மறியலுக்கு முயற்சி செய்து சாலையில் அமர்ந்தனர்.

இதனை அறிந்த திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து தேமுதிகவினரிடம் சமாதான பேச்சில் ஈடுபட்டனர்.அப்போது சிறிது நேரம் போலீசாருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.பின்னர் சிறிது நேரம் பேச்சுவார்த்தைக்குப் பின்பு சமாதானமான தேமுதிகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அங்குப் பரபரப்பு ஏற்பட்டது.