Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

காவலர்கள் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் - முதல்வர்

By VASUKI
18 Jul 2025, 09:05 PM
பொதுமக்களிடம் காவல் துறையினர் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
சென்னையை அடுத்த ஊனமாஞ்சேரியில் செயல்படும் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற டிஜிபி சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல் உயர் அதிகாரிகள் பயிற்சியை நிறைவு செய்த காவல் துணை கண்காணிப்பாளர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது, காவல் பணி என்பது மக்கள் பிரச்சினைகளை நேரடியாக தீர்த்து வைக்கின்ற மிக உன்னதமான பணி என்று குறிப்பிட்ட முதல்வர், பொதுமக்களிடம் கனிவாக, மரியாதையாக நடந்து, அவர்களுடைய குறைகளை பொறுமையாக கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.


உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் காவலர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். பணிச்சுமைக்கு மத்தியில் உடல்நலத்தை பார்த்துக்கொள்வதோடு, குடும்பத்துடனும் நேரத்தை செலவிட வேண்டும் என்று பயிற்சியை நிறைவு செய்த காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்.