தமிழ்நாடு

தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசம்– திமுக கூட்டணி கட்சித் தலைவர் வாசுகி குற்றச்சாட்டு

By Jayakumar
12 May 2025, 02:24 PM
சிபிஎம் வாசுகி, தமிழக அரசு, போலீஸ், முதலமைச்சர் முகஸ்டாலின், CPIM Vasuki, Tamil Nadu Government, Police, Chief Minister MK Stalin
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேட்டிளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ.வாசுகி, “தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மிக மோசமாக உள்ளது. நியாயமான, ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

முதல்வர் கவனம் செலுத்த வேண்டும்

சென்னை போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடிய இடங்கள் குறைக்கப்பட்டு வருகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத, குறுகலான இடத்தில் உங்களது எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு கூறுவது எந்த விதத்திலும் நியாயமில்லை. மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தும்போது, அவர்கள் புறப்படும் இடத்திலேயே கைது செய்வது, வீட்டில் சிறையில் வைப்பது போன்ற மிக மோசமான அணுகுமுறைகள் பின்பற்றப்படுகின்றன. எனவே காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர் இப்பிரச்னைகளில் கூடுதலாக கவனம் செலுத்தி ஒழுங்குப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கைது செய்யப்படுபவர்களை விசாரித்து எலும்பு முறிவுடன் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. கழிப்பறையில் வழுக்கி விழுந்து விட்டதாகவும், கீழே விழுந்து விட்டதாகவும் கூறுவது நம்பும்படியாக இல்லை. கைதிகளாக இருந்தாலும் மனித உரிமைப் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு

தூர்வாரும் பணியைத் தண்ணீர் வருவதற்கு முன்பாகவே முழுமையாக முடிக்க வேண்டும். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் பரிந்துரைகளை வெளியிடுவதற்கு நீதிமன்றமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து, அதைச் செயல்படுத்த வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பை வெறும் கணக்கெடுப்பாக செய்யாமல், சமூகப் பொருளாதாரப் பின்புலத்துடன் செய்ய வேண்டும். ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது மேற்கொள்ளப்படும் என்பது இதுவரை சொல்லவில்லை. மேலும் இக்கணக்கெடுப்பு எந்த அடிப்படையில் எடுக்கப்படும் என்பது குறித்தும் தகவலை தெரிவிக்கவில்லை. குறிப்பாக காலவரையை நிர்ணயிக்க வேண்டும்”என தெரிவித்தார்