Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மினிஸ்டர் எஸ்கார்ட்., சப்-இன்ஸ்பெக்டர் என புரூடா... மோசடி ஆசாமி கைது..

By leninakathiya
22 Aug 2024, 04:46 PM
மேட்டுப்பாளையம் அருகே, அரசு வேலை வாங்கி வருவதாக மோசடி செய்த வழக்கில் போலீசாரிடம் சிக்கியவரிடம் காவல்துறை அடையாள அட்டை, துப்பாக்கி, லத்தி ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கோவை மாவட்டம் ஈச்சனாரியை அடுத்த மாச்சேகவுண்டன் பாளையம் பகுதியில் தினேஷ் என்பவரின் வீடு உள்ளது. இந்த வீட்டிற்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வீரபத்திரன் என்பவர் வாடகைக்கு குடி வந்து உள்ளார். அப்போது அவரது ஆதார் நகல் மற்றும் அவரது சகோதரர் வினு என்பவரின் போலீஸ் அடையாள அட்டை நகலை கொடுத்து உள்ளார். 

தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு தினேஷ் அங்கு உள்ள கோவிலுக்கு சென்றபோது வினுவை சந்தித்து உள்ளார். அவரிடம் எந்த காவல் நிலையத்தில் பணி புரிகிறீர்கள் என தினேஷ் கேட்ட போது, தான் அமைச்சருக்கு பாதுகாப்பு பணியில் இருப்பதாக வினு தெரிவித்து உள்ளார். அப்போது தினேஷின் உறவினர் அம்சவேனி என்பவரும் உடனிருந்துள்ளார்.

இந்நிலையில், தான் அமைச்சருக்கு எஸ்கார்ட் பணியில் இருப்பதால், அரசு வேலை வாங்குவது எளிது என்றும் வேலை வாங்குவதற்கு, 2 லட்சம் ரூபாய் ஆகும் எனவும் கூறி இருக்கிறார். அதற்கு வீட்டில் பேசிவிட்டு தகவல் கொடுப்பதாக தினேஷும், அம்சவேனியும் கூறிச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி தினேஷ், வீரபத்திரன் குடியிருக்கும் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, வீட்டின் வெளியில் வைக்கப்பட்டு இருக்கும் இருந்த சில பொருட்கள் சிதறி கிடந்துள்ளன. இது குறித்து அக்கம், பக்கத்தினரிடம் விசாரித்தபோது மூன்று, நான்கு தினங்களாவே வீட்டிற்கு யாரும் வரவில்லையென தெரிவித்து உள்ளனர்.

பிறகு தினேஷ் மாற்று சாவியை கொண்டு வீட்டை திறந்து பார்த்த போது வீட்டிற்குள் கைத்துப்பாக்கி, போலீசார் பயன்படுத்தும் தடிகள், மெட்டல் டிடெக்டர், தமிழ்நாடு போலீஸ் என அச்சிடப்பட்ட அடையாள அட்டை ஆகியவை இருந்து உள்ளன. வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தததால் அதிர்ச்சி அடைந்த தினேஷ், அனைத்து பொருட்களை எடுத்து கொண்டு சென்று மதுக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை செய்தபோது, வினு மீது மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஏற்கனவே அரசு வேலை வாங்கி வருவதாக மோசடி செய்த வழக்கு விசாரணையில் இருப்பதும் தெரியவந்தது. வினு மற்றும் வீரபத்திரன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்த வினுவை (34) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள வீரபத்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.