Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

மக்களே இதை செய்யாதீர்கள்.. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம்!

By Christon
10 Jan 2026, 12:29 PM
சென்னையில் அனுமதியின்றி மரங்களை வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரிக்கப் பல்வகை மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வரும் நிலையில், பொது இடங்களில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை அத்துமீறி வெட்டுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், இந்தச் சேவைகளைப் பொதுமக்கள் எளிமையாகவும் துரிதமாகவும் பெறும் வகையில், மாநகராட்சி ஒரு புதிய ஆன்லைன் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை மாற்றம்

இதுவரை, மரங்களின் கிளைகளை அகற்றுதல், காய்ந்துபோன மரங்களை அகற்றுதல், மாற்று இடங்களில் மரங்களை நடுதல் மற்றும் மரங்களை அகற்றுதல் போன்ற சேவைகளுக்கான அரசு மற்றும் தனியார் விண்ணப்பங்கள் வனத்துறை மூலமாகப் பெறப்பட்டு, மாவட்ட பசுமைக் குழுவிற்கு நேரடியாக அனுப்பப்பட்டு வந்தன.

இந்தக் காலதாமதத்தைத் தவிர்க்கும் விதமாக, வரும் ஜனவரி 12 ஆம் தேதி முதல், அனைத்து விண்ணப்பதாரர்களும், விண்ணப்பங்களை மாநகராட்சி இணையதளம் (https://chennaicorporation.gov.in/gcc/) மற்றும் நம்ம சென்னை செயலி (Namma Chennai App) மூலமாக மட்டுமே விண்ணப்பிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் விண்ணப்பதாரர்கள் இந்தச் சேவைகளைப் பெறுவதற்கு மாநகராட்சி இணையதளத்தில் உள்ள 'பசுமைக் குழு போர்ட்டலில்' விண்ணப்பிக்கலாம்.

அபராதம் குறித்து மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உரிய அனுமதியின்றிச் செயல்படுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் அபராதமும் மரக்கிளைகளை வெட்டுதல், மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகள் பொருத்துதல், மரங்களைச் சுற்றி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்டவற்றிற்கு ரூபாய் 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

எனவே, மரம் அகற்றுதல், கிளைகள் அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்குப் பொதுமக்கள் கட்டாயம் சென்னை மாநகராட்சி இணையதளம் மற்றும் நம்ம சென்னை செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்குமாறு மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.