Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

சென்னை மின்சார ரயில்: மதுபோதையில் ரகளை - வீடியோ வைரல்!

By VASUKI
11 Sep 2025, 04:23 PM
கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயிலில், மது அருந்தியபடி "ஜாலி" பயணம் செய்த இரண்டு வடமாநில இளைஞர்களை ரயில்வே பாதுகாப்புப் படையினர் மடக்கிப் பிடித்தனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு இளைஞர் கன்னத்தில் ஓங்கி அறையப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் பயணம் செய்த பயணிகள், இரண்டு இளைஞர்கள் மது அருந்தி ரகளையில் ஈடுபட்டதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். ரயில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகில் வந்தபோது, இது குறித்து உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் ஒருவர், இருவரையும் ரயிலிலிருந்து கீழே இறக்கி, அவர்கள் மறைத்து வைத்திருந்த மதுபாட்டிலை வெளியே எடுக்கச் சொன்னார். ஆனால், மதுபோதையில் இருந்த அந்த இளைஞர்கள் பாதுகாப்புப் படை வீரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாதுகாப்புப் படை வீரர், இளைஞர் ஒருவரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து, மதுபாட்டிலையும் பறித்துத் தண்டவாளத்தில் வீசினார்.

இந்தச் சம்பவம், சக பயணிகளை முகம் சுளிக்க வைத்துள்ளது. சமீபகாலமாக, ஓடும் ரயில்களில் குட்கா விற்பனை, மதுபோதையில் ரகளை போன்ற சமூக விரோதச் செயல்கள் அதிகரித்து வருவதாகப் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் இணைந்து தீவிர கண்காணிப்பு நடத்தி, இதுபோன்ற சட்ட விரோதச் செயல்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.