Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

எண்ணெய் கசிவு வழக்கு... மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு பசுமைத் தீர்ப்பாயம் தடை

By Jayakumar
19 Mar 2025, 04:30 PM
இழப்பீடாக 19 கோடி ரூபாயை வங்கி உத்தரவாதமாக நான்கு வாரங்களில் செலுத்த சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு தீர்ப்பாயம் உத்தரவு

கடந்த 2023ம் ஆண்டு எண்ணெய் கசிவுக்கு காரணமான சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு 73 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்த கூறி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

எண்ணெய் படலம்

சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த அதிகனமழை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டது. அப்போது, மணலி பகுதியில் உள்ள சென்னை பெட்ரோலிய கழக நிறுவனம் அருகில், பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக கடலில் எண்ணெய் படலம் பரவியது.இதன் காரணமாக அப்பகுதிகளில் மீன்கள் செத்து மிதந்தன. குடியிருப்பு சுவர்கள், தெருக்கள், தாவரங்கள்,   மீன்பிடி படகுகள் மற்றும் வலைகள் மீதும் எண்ணெய் படலம் படிந்தது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

இதனால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு 73 கோடியே 68 லட்சம் ரூபாய் இழப்பீடாக செலுத்தும்படி சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை பெட்ரோலிய கழகம் தாக்கல் செய்த வழக்கு, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.

உத்தரவுக்கு தடை

அப்போது, எண்ணெய் கசிவு குறித்து ஐ.ஐ.டி இன்னும் அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது நியாயமற்றது என சென்னை பெட்ரோலிய கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, இழப்பீடாக 19 கோடி ரூபாயை வங்கி உத்தரவாதமாக நான்கு வாரங்களில் செலுத்த சென்னை பெட்ரோலிய கழகத்துக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம்,  மாசு கட்டுப்பாட்டு வாதிய உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், சென்னை பெட்ரோலிய கழகத்தின் மனுவுக்கு பதிலளிக்கும்படி மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தது.