Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

ஒரே நாளில் 4 லட்சம் பயணிகள் பயணம்.. விமான சாகத்தால் திணறிய மெட்ரோ ரயில்

By leninakathiya
07 Oct 2024, 07:29 PM
சென்னை மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமான படையின் 92 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் நேற்றைய தினம் சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னை மெரினா கடற்கரையில் கூடியிருந்த நிலையில், முக்கிய சாலைகள் உட்பட பொதுப் போக்குவரத்துகளும் இயங்க முடியாமல் ஸ்தம்பித்து போனது.

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் விமான சாகசத்தை கண்டு களிக்க பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், காலை முதலே வர தொடங்கியதால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசில் ஏற்பட்டது. குறிப்பாக சென்னை அண்ணா சாலையில் வாகனங்களை நகர முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து சில ஏற்பட்டது.

வான்சாகச நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த பிறகு சுமார் 3 மணிநேரத்திற்கு மேலாக பொது மக்கள் சாரை சாரையாக வெளியேறினர். இதனால் அண்ணா சதுரங்கம் பேருந்து நிலையம், தேனாம்பேட்டை மெட்ரோ, ஓமந்தூரார் மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையம் என இப்பகுதியில் மக்கள் கூட்டமாக கூடியதால் போக்குவரத்து மற்றும் சாலையில் மக்கள் தேங்கி நிற்கும் நிலையில் இருந்தது.

குறிப்பாக விமானப்படை சார்பில் வான்சாகச நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் மூன்று லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் 15 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் மெரினாவை சுற்றியுள்ள சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதன் ஒரு பகுதியான சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களும் கூட்ட நெரிசலோடு காணப்பட்டது. வழக்கமாக ஞாயிறு அன்று ஒரு லட்சத்து 70 ஆயிரம் பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் நிலையில் நேற்று ஒரே நாளில் நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சென்னை மெட்ரோ ரயிலில் ஒரே நாளில் அதிகபட்சமாக கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி  3,74,087 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ள நிலையில் அந்த சாதனையை முறியடித்து தற்பொழுது புதிய எண்ணிக்கையை எட்டியுள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் தற்போது தகவல் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மெட்ரோ ரயில் மட்டுமல்லாது புறநகர் மின்சார ரயில், பறக்கும் இரயில் போன்ற பல்வேறு போக்குவரத்திலும் லட்சக்கணக்கான மக்கள் நேற்றைய தினம் பயணம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.