தமிழ்நாடு

நிதி ஆயோக் கூட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்

By MUTHUKRISHNAN
22 May 2025, 08:35 AM
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.
நிதி ஆயோக்கின் கூட்டம், பிரதமர் தலைமையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.

முதலமைச்சர் டெல்லி பயணம்

நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் தலைநகர் டெல்லியில் வருகிற 24-ம் தேதி நடைபெற உள்ளது. நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அந்த வகையில் இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

இதற்காக நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார். வருகிற 24-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதியை தரும்படி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இபிஎஸ்க்கு அமைச்சர் ரகுபதி பதிலடி

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத்தை எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளனர். 2 நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்வதாக கூறுவது குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சரின் டெல்லி பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி தமது எக்ஸ் தள பக்கத்தில் சாடியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் ரகுபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், சுயநலத்திற்காக இபிஎஸ் போல் அமித்ஷா வீட்டிற்கு, முதலமைச்சர் செல்ல மாட்டார் எனவும் அமைச்சர் ரகுபதி ஆவேசமாக சாடியிருக்கிறார். தனது மகன், சம்பந்திக்காக பாஜகவோடு கூட்டணி வைத்த எடப்பாடி பழனிசாமியின் அபத்தங்கள் தமிழக மக்களிடம் ஒருநாளும் வெற்றியடையாது என்றும் அவர் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.