தமிழ்நாடு

காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை வெட்டிக் கொலை - பெண்ணின் சகோரரர் உட்பட 3 பேர் கைது

By leninakathiya
25 Jul 2024, 02:27 PM
Virudhunagar Murder Case : சிவகாசியில் காதல் திருமணம் செய்த புதுமாப்பிள்ளை, திருமணமான 8 மாதத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Virudhunagar Murder Case : விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் இந்திரா நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் கார்த்திக்பாண்டி (26). இவர் சிவகாசியில் மெக்கானிக் வேலை செய்தபோது அதே பகுதியில் உள்ள கடையில் வேலை செய்த சிவகாசி வம்பிழுத்தான் முக்கு பகுதியை சேர்ந்த பொன்னையா மகள் நந்தினி (22) என்பவருடன் காதல் ஏற்பட்டது.

இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து, அய்யம்பட்டியில் வீடு எடுத்து தனியாக வசித்து வந்தனர். சிவகாசி ஹவுசிங் போர்டு அருகே உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில் நந்தினி வேலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இரவு 9 மணி அளவில் நந்தினியை அழைத்துச் செல்வதற்காக கார்த்திக் பாண்டி வந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் கார்த்திக் பாண்டியை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். 

இது குறித்து தகவலறிந்து வந்த திருத்தங்கல் போலீஸார் கார்த்திக் பாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் சுப்பையா ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர்.

நந்தினியின் சகோதரர் பாலமுருகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கார்த்திக் பாண்டியை கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, பெண்ணின் சகோதரர்கள் பாலமுருகன் மற்றும் தனபாலன் அவரது நண்பர் சிவா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.