தமிழ்நாடு

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. தமிழ்நாடு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

By nagalekshmi
23 Apr 2025, 06:32 AM
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து தமிழகத்தில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தை பார்வையிட நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அப்போது அப்பகுதியில் ராணுவ வீரர் சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் சுற்றுலா பயணிகளை நோக்கி தாக்குதல் நடத்தியதில் 25-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்திலும் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலை ஒட்டி தமிழக உளவுத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக மாநிலத்தில் செயல்பட்டு வரும் உளவுத்துறை, தீவிரவாத தடுப்பு பிரிவு, கியூ பிரிவு, ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சந்தேகப்படும் படியான நபர்கள், கலவரத்தை தூண்டுபவர்கள், சமூக வலைதளங்களில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பதிவுகளை வெளியிடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து ரயில் நிலையத்திலும் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்திரவிடப்பட்டுள்ளது.