தமிழ்நாடு

நீட் தேர்வு: அதிமுக போராடுவது போல் நாடகமாடுகிறது - அமைச்சர் கோவி.செழியன்

By Jayakumar
19 Apr 2025, 08:46 PM
தமிழகத்தில் நீட் தேர்வை அனுமதித்த அதிமுக, இப்போது போராடுவது போல் நாடகமாடுகிறது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு

தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த வரை நீட் தேர்வு தமிழகத்தில் நுழைவதற்கு அனைத்து நிலைகளிலும் தடுத்து நிறுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் கூட நீட் தேர்வுக்கு தமிழகத்திற்குள் இடம் தரப்படவில்லை. அவரும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால், எல்லாவற்றுக்கும் எடுபிடியாக, அடிமையாக 4 ஆண்டுகளாக மத்திய மோடி அரசின் தயவில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்த காரணத்தால், அன்றைக்கு நீட் தேர்வை ஏற்றுக்கொண்டார். ஆனால், நீட் தேர்வை திமுக எதிர்ப்பது மட்டுமல்லாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, சட்டப்பேரவையிலும் எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. இதனால், நீட் தேர்வு எதிர்ப்பு என்றால், அது திமுகதான் முழுமையாக உரிமை எடுத்துக் கொள்கிறது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

மக்களை ஏமாற்ற நாடகமாடுகின்றனர்

இதை மடைமாற்றுவதற்காகவும், மறைப்பதற்காகவும், நீட் தேர்வை உள்ளே நுழைய விட்ட எடப்பாடி பழனிசாமி, இப்போது போராட்டம் நடத்துவது கண்டனத்துக்குரியது மட்டுமல்ல நகைப்புக்குரியதாகவும் உள்ளது. இதை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் எப்போதும் மக்களோடு துணை நிற்பது திமுகதான். நீட் எதிர்ப்பு, மாநில உரிமை காப்பது, மாநில சுயாட்சி மீட்பது, யு.ஜி.சி.யை எதிர்ப்பது என மத்திய அரசின் கொடுஞ்செயலுக்கு களத்தில் நின்று போராடும் போராளி தமிழக முதல்வர்தான். போராடுகிற இயக்கமும் திமுகதான். மற்ற இயக்கங்கள் மத்திய அரசுக்கு துணை நின்றுவிட்டு மக்களை ஏமாற்ற நாடகமாடுகின்றனர்” என தெரிவித்தார்.