தமிழ்நாடு

ஊஞ்சல் சேவையில் வரதராஜ பெருமாள்! - காஞ்சிபுரம் கோவிலில் நவராத்திரி உற்சவம் கோலாகலம்!

By VASUKI
25 Sep 2025, 06:31 AM
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவத்தின் இரண்டாம் நாளில், பெருமாளும், தாயாரும் ஊதா நிறப்பட்டு உடுத்தி, ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
உலகப் புகழ்பெற்றதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றுமான காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் (வரதராஜ பெருமாள்) கோவிலில், புரட்டாசி மாத நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த உற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று, வரதராஜ பெருமாளும், பெருந்தேவி தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள் பாலித்தனர்.

நவராத்திரி விழாவின் இரண்டாவது நாளான இன்று, வரதராஜ பெருமாள் மற்றும் பெருந்தேவி தாயார் இருவரும் ஊதா நிறப் பட்டு உடுத்தி, வைர வைடூரிய மாலைகளும், பல்வேறு வண்ண மலர் அலங்காரங்களும் அணிந்து, கோவிலின் உள்ளே உள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளினர்.

இதனைத் தொடர்ந்து, மேளதாளங்கள் முழங்க, வேத பாராயணங்கள் ஓத பெருமாளுக்கும் தாயாருக்கும் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பக்திப் பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்குச் சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டு, நெய்வேத்தியங்கள் படைக்கப்பட்டன.

இந்த விழாவில், காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, வரதராஜ பெருமாளின் அருளைப் பெற்றனர். நவராத்திரி உற்சவத்தின் ஒன்பது நாட்களிலும், ஒவ்வொரு நாளும் வரதராஜ பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.