தமிழ்நாடு

காவலாளி வங்கி கணக்கில் பல கோடி பணம் பரிவர்த்தனை – அமலாக்கத்துறை 10 மணி நேரம் சோதனை

By Jayakumar
24 Sep 2025, 09:55 PM
ஆம்பூரில் காவலாளியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வங்கி கணக்கில் பலகோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட மு.கா.கொள்ளை பகுதியை சேர்ந்தவர் சபீர். இவர் தனியார் தொழிற்சாலையில் காவலாளியாக பணியாற்றி வந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக ஓய்வு பெற்று தனது வீட்டிலேயே பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

பல கோடி பணம் பரிவர்த்தனை

இந்நிலையில் இவரது ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கி கணக்கு எண் ஆகியவற்றை வைத்து மோசடி கும்பல் சிலர் இவரது வங்கி கணக்கை தங்களது வங்கி கணக்குடன் இணைத்து பல கோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அமலாக்கத்துறை உதவி இயக்குனர் மோகித் தலைமையிலான 7 அதிகாரிகள் சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாக ஆம்பூர் பகுதியில் உள்ள சபீரின் வீட்டில் ஆய்வு செய்து அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் சில ஆவணங்களை கொண்டு சென்றனர்.

அமலாக்கத்துறை சோதனை

காவலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவரின் ஆவணங்களை பயன்படுத்தி அவரது பெயரில் மோசடி கும்பல் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிலையில் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்ட சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.