Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கோயில் விதிகளை மீறிய நாடாளுமன்ற உறுப்பினர்-அமைச்சரின் மனைவி.. வைரலாகும் வீடியோ

By nagalekshmi
08 Apr 2025, 09:08 PM
காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் கோபுரத்தின் மீது புனித நீர் உற்றுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், அறநிலைத்துறை அமைச்சரின் மனைவி சாந்தி ஆகியோர் மேலே சென்ற சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற தென்காசி நகரில் அமைந்துள்ள அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயிலில் 19 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழுக்கு விழாவானது நேற்று நடைபெற்றது. இந்நிலையில், கோயில் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்ட பின்னரே குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என நம்பிராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த இரண்டு பேர் கொண்ட அமர்வு, பணிகள் முழுமையாக நடத்திய பின்னரே கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் எனவும் இதனை ஐஐடி குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும் என கூறி கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதித்தது. இதைத்தொடர்ந்து, திருக்கோயிலின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த இரண்டு பேர் கொண்ட அமர்வு கும்பாபிஷேகம் நடத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியது.

இப்படி பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் திட்டமிட்டபடி கும்பாபிஷேக பணிகள் நடைபெற்ற நிலையில் திருக்கோயில் கருவறை பகுதியில் உள்ள கோபுரத்தின் மீது புனித நீர் உற்றுவதற்காக அர்ச்சகர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் காண்காணிப்பாளர், சட்டமன்ற உறுப்பினர் ராஜா, நாடாளுமன்ற உறுப்பினரான ராணி ஸ்ரீகுமார், அறநிலைத்துறை அமைச்சரின் மனைவி சாந்தி ஆகியோர் மேலே சென்றுள்ளனர்.

இதில் கோயிலின் ஆகம விதிகளை மீறி பெண்கள் சென்றதாக இந்து அமைப்பினர் மற்றும் ஆன்மிக பக்தர்கள் விமர்சித்து வந்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இது குறித்து இணைதள வாசிகளோ கோயில் ஆகம விதிகளை மீறி அமைச்சரின் மனைவி சாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார் எப்படி ஏறினார்கள் என்று பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.