Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

கட்டுக்கட்டாக சிக்கிய பணம்...ஹவாலா கும்பல் குறித்து விசாரணை

By Jayakumar
17 Apr 2025, 01:31 PM
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயிலில் கடத்தப்பட்ட ரூ.44 லட்சம் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது காரில் கடத்தப்பட்ட ஹவாலா பணம் ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தமிழக-கேரள எல்லை பகுதியான கேரள மாநிலம் ஆரியங்காவு பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, தமிழகத்திலிருந்து கேரளா நோக்கி சென்ற தமிழகப்பதிவு எண் கொண்ட ஒரு ஸ்கார்பியோ வாகனத்தை மறித்து கேரளா போலீசார் சோதனை செய்துள்ளனர்.அப்பொழுது, அந்த வாகனத்தில் இருந்த ஒரு பேக்கில் கட்டு, கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருப்பது தெரிய வரவே, அது தொடர்பான ஆவணங்களை போலீசார் கேட்டுள்ளனர்.

ஆனால், அது தொடர்பாக எந்த விதமான ஆவணங்களும் அந்த காரில் சென்ற நபரிடம் இல்லாத நிலையில், அந்த நபரையும், காரையும் காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, அந்த நபர் விருதுநகர் மாவட்டம், ராமசாமி என்பவரது மகன் பாண்டியன் என்பதும், அவர் கேரளாவிற்கு பணத்தை கொண்டு செல்வதும், ஆனால் யாரிடம் கொடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியாது எனவும், தன்னை ஒரு நபர் தொடர்பு கொள்வார் என கூறிவிட்ட நிலையில், தான் இந்த பணத்தை எடுத்து வந்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

போலீசார் விசாரணை

அதனைத்தொடர்ந்து, பாண்டியனை கைது செய்த கேரளா போலீசார் அவரிடம் இருந்த ஹவாலா பணம் ரூ.15 லட்சத்தி 10 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, தமிழக-கேரளா எல்லை பகுதியான புளியரை வழியாக சமீப காலமாக பல்வேறு கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயிலில் கடத்தப்பட்ட ரூ.44 லட்சம் மதிப்பிலான பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது காரில் கடத்தப்பட்ட ஹவாலா பணம் ரூ.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரு மாநில காவல்துறை அந்த பகுதியில் தொடர் சோதனையில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் போலீசார் ஹாவாலா பணம் கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.