தமிழ்நாடு

வீட்டு வரி உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்

By MUTHUKRISHNAN
16 May 2025, 11:04 AM
கடந்த சில நாட்களாக பேருந்து கட்டணம், வீட்டு வரி ஆகியன உயர்த்தப்பட உள்ளது என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் கடந்த 9-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடியின் கட்டுமான பணிக்கு ரூ.236 கோடி மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டினார். அதற்கான பூமி பூஜை விழா இன்று பஞ்சப்பூர் அருகே அமைந்துள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடி வளாகத்தில் நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி செங்கல் எடுத்து வைத்து பூமி பூஜையை தொடக்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்வில் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா உட்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மேயர் அன்பழகன், மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கூறுகையில், ”புதிதாகத் திறந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஜூன் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் கடைகள் மற்றும் இதர பணிகளுக்கான டெண்டர் வேலைகள் நடக்கிறது. மேலும் அரியலூர், பெரம்பலூர் பேருந்துகள் சத்திரம் பேருந்து நிலையத்தில் நிற்கும் எனவும், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டம் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயங்கும். வழக்கம்போல் சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம் இயங்கும். கூடவே புதிய பேருந்து நிலையமும் இயங்கும்” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

வீட்டு வரி உயர்த்தப்படுகிறதா?

பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என கூறப்படுகிறதே என்று பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு, ”கட்டண உயர்வு எல்லாம் இருக்காது. கிலோமீட்டர் மற்றும் ஸ்டேஜ் கணக்கீட்டின் அடிப்படையில் தான் கட்டணங்கள் இருக்கும்” என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். வீட்டு வரி உயர்வு என்ற வதந்தியை நம்ப வேண்டாம், ஏற்கனவே நடைமுறையிலுள்ள வீட்டு வரியை மட்டும் தான் வசூல் செய்ய உத்தரவிட்டதாகவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

Read more: வெளியானது பத்தாம் வகுப்பு ரிசல்ட்- அசத்திய சிவகங்கை மாவட்டம்