Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

குட் பேட் அக்லி படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்: இளையராஜா பாடல்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மனு!

By VASUKI
17 Sep 2025, 09:12 PM
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'மைத்திரி மூவி மேக்கர்ஸ்' தயாரிப்பில், நடிகர் அஜித் நடிப்பில் 'குட் பேட் அக்லி' திரைப்படம், சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில்,' இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 'குட் பேட் அக்லி' படத்தில் இசையமைப்பாளர் இளையராஜவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த தடை நீக்க கோரி, 'மைத்திரி மூவி மேக்கர்ஸ்' நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது.

பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில், இசை நிறுவனங்களிடம் இருந்து இந்த பாடல்களின் உரிமை பெறப்பட்டுள்ளது. இடைக்கால தடையால், நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து, படத்தை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தங்கள் நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. படத்தில் இருந்து மூன்று பாடல்களை நீக்குவது எளிதான காரியம் அல்ல. படத்தில் எந்த மாற்றம் செய்தாலும், புதிதாக தணிக்கை சான்றிதழுக்காக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்திடம் விண்ணப்பித்து, சான்று பெற வேண்டும்.

படம் திரையரங்குகள், ஓடிடி தளங்களில் திரையிட்ட பின், எவ்வாறு தடை உத்தரவு பெற முடியும் என வாதம் வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, தடையை நீக்க கோரி பட தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு, இளையராஜா பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 24ம் தள்ளி வைத்தார்.