தமிழ்நாடு

கனகசபை தரிசனம்: தீட்சிதர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

By VASUKI
11 Sep 2025, 07:21 PM
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் பக்தர்கள், கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சௌந்தர் அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தீட்சிதர்கள் தரப்பில், கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய தீட்சிதர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும் அரசியல் சாசன பதவி வகிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அறநிலையத்துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன், கனக சபை மீதேறி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதை ஏற்றுக் கொண்ட தீட்சிதர்கள் தரப்பு தற்போது அதனை மாற்ற முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.

இதைத் தொடர்ந்து கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய யார் யாருக்கு அனுமதி வழங்கப்படும் என்பது குறித்து மனுவாக தாக்கல் செய்யும்படி தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை அக்டோபர் 9ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.