Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

லாட்டரி அதிபர் மார்டின் முறைகேடு வழக்கு... விசாரணையை தொடர அமலாக்கத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

By Kalandhai
28 Oct 2024, 07:02 PM
லாட்டரி அதிபர் மார்டினுக்கு எதிரான முறைகேடு வழக்கை முடித்து வைத்த நீதிமன்றத்தின் உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இந்த விசாரணையை அமலாக்கத்துறை தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: லாட்டரி அதிபர் மார்டின், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான முறைகேடு வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்திருந்தது. இந்த நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், விசாரணையை தொடர மத்திய குற்றப்பிரிவு போலீசார், அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம், சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 7 கோடியே இருபது லட்சத்து ஐயாயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. 

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மார்டின் உள்ளிட்டோருடன் இணைந்து கேரளா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த தொகை என நாகராஜன் வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து, நாகராஜன், மார்டின், அவரது மனைவி லீமா ரோஸ் உள்ளிட்ட நான்கு பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது. 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதால், வழக்கை முடித்து வைக்கக்கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் மார்டின் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்து வைத்தது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், இந்த விவகாரத்தில் மோசடி நடைபெற்றதற்கான ஆதாரங்கள் இருந்த நிலையிலும், போலீசார் அறிக்கையை ஏற்று நீதிமன்றம் வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது தவறு என வாதிட்டார். மத்திய குற்றப்பிரிவு சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன், மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் அறிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதனை எதிர்த்து மனுத்தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என வாதிட்டார். 

அதேபோல, மார்டின் உள்ளிட்டோர் சார்பிலும் அமலாக்கத்துறை மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வாதங்களை ஏற்க மறுத்து, மார்ட்டின் உள்ளிட்டோர் மீதான வழக்கை முடித்து வைத்த ஆலந்தூர் நீதிமன்ற உத்தரவை நீதிபதிகள் ரத்து செய்தனர். மேலும், வழக்கின் விசாரணையை தொடர மத்திய குற்றப்பிரிவு போலீசார், அமலாக்கத்துறைக்கும் அவர்கள் உத்தரவிட்டனர். வழக்கைப் பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரே இந்த வழக்கை முடித்து வைக்குமாறு அறிக்கை தாக்கல் செய்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.