Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

Anna University : 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை.. போலி கணக்கு புகாரை அடுத்து அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

By leninakathiya
26 Aug 2024, 04:21 PM
900 Professors Lifetime Ban at Anna University : ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக பெயர் பதிவு செய்த 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

900 Professors Lifetime Ban at Anna University : அண்ணா பல்கலைக்கழகத்தில் போலி பேராசிரியர்கள் நியமனத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக ‘அறப்போர் இயக்கம்’ குற்றம்சாட்டி இருந்தது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 224 தனியார் சுயநிதி கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒரே நேரத்தில் பணிபுரிவது போன்று போலியாக கணக்கு காட்டப்பட்டிருப்பதாக தெரிவித்து இருந்தது.

இது குறித்து தெரிவித்திருந்த அண்ணா பல்கலைக்கழக நிர்வாக குழு, “அங்கீகாரம் பெறுவதற்காக அதிக அளவில் போலியாக பேராசிரியர்களின் தகவல்களை பதிவுசெய்த கல்லூரிகளுக்கு நிரந்தரமாக அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும், தவறு செய்த கல்லூரிகளில் ஒன்றிலிருந்து 3 ஆண்டு வரை அங்கீகாரத்தை ரத்து செய்யவும், தவறு செய்த கல்லூரிகளுக்கு அபராதம் வசூலிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற 295 கல்லூரிகளின் மீது புகார் பெறப்பட்டதை அடுத்து, அனைத்து கல்லூரிகளுக்கும் விளக்கம் கேட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. மேலும், முறைகேடு குறித்து விசாரணை செய்ய அண்ணா பல்கலைக்கழகம் சார்பிலும் குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில், மோசடியில் ஈடுபட்ட 295 தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும், ஒன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளில் பேராசிரியர்களாக பெயர் பதிவு செய்த 900 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை ஆய்வு செய்ய அனைத்து பருவத்தேர்விலும், அனைத்து பாடப்பிரிவுகளிலும் பொதுவான கேள்வித்தாள் தயார் செய்து  தேர்வை நடத்தி சோதனை செய்ய அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.