Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

அய்யோ.. தீர்ப்பை கேட்டதும் கதறி அழுத அபிராமி! தகாத உறவால் வந்த வினை

By MUTHUKRISHNAN
24 Jul 2025, 03:11 PM
திருமணத்தை மீறிய உறவில் 2 குழந்தைகளை கொன்ற தாய் அபிராமிக்கும், பிரியாணி கடை நடத்தி வந்த மீனாட்சி சுந்தரத்துக்கும் சாகும்வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற வாயிலில் கதறி அழுதார் அபிராமி.
2018 ஆம் ஆண்டு தமிழ்நாட்டினை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று, கள்ளக்காதலனுடன் இணைந்து பெற்ற குழந்தைகளை பெண் ஒருவர் கொலை செய்தது தான். 7 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைப்பெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளைப் பகுதியில் தனியார் வங்கியில் பணியாற்றி வந்த விஜய் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவரது மனைவியின் பெயர் அபிராமி. இவர்களுக்கு அஜய் (6 வயது) மற்றும் கார்னிகா (4) என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.

2018 ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த செயலி டிக்டாக். அபிராமி இதில் தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவிட்டு வந்தார். சினிமாவின் மீது அதிக மோகம் கொண்ட அபிராமி, அப்பகுதியில் பிரியானி கடையில் வேலை செய்து வந்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்துள்ளார்.

இந்த விவகாரம், அபிராமியின் கணவர் விஜய்க்கு தெரிய வர அவர் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளன. மீனாட்சி சுந்தரத்துடன் சேர்ந்து வாழ விரும்பிய அபிராமி, விவகாரத்து பெறுவதற்கான வழியினை நாடாமல், தனது கணவரையும் குழந்தைகளையும் கொல்வதற்கு முடிவு செய்தார்.

இதற்காக, அபிராமி தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு பாலில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைக் கலந்து கொடுத்துள்ளார். அதிர்ஷ்டவசமாக இந்த பாலினை குடித்த விஜய் உயிர் தப்பியுள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.

இதுத்தொடர்பாக விஜய் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, மீனாட்சி சுந்தரத்துடன் சேர்ந்து அபிராமி தப்ப முயன்றுள்ளார். காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சுந்தரத்துடன் தப்பிக்க முயன்ற அபிராமியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

7 வருடங்கள் ஏற்கெனவே சிறைவாசம் அனுபவித்து வருவதால், குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு குற்றவாளி மீனாட்சி சுந்தரம் நீதிபதி செம்மலிடம் வேண்டுகோள் விடுத்தார். குழந்தைகளை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கருணை ஏதும் காண்பிக்க இயலாது. அதேசமயம் மரண தண்டனையும் விதிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி செம்மல் குற்றவாளிகளான அபிராமி மற்றும் மீனாட்சி சுந்தரத்திற்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தார்.

தீர்ப்பை கேட்டதும், பெற்ற குழந்தைகளை கொன்ற வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அபிராமி நீதிமன்ற வாயிலில் கண்ணீர்விட்டு கதறி அழுதார்.