Kumudam News 24 X 7 AMP Article
தமிழ்நாடு

வாணியம்பாடியில் ஆடுகளை காரில் திருடிச்சென்ற வழக்கறிஞர் கைது

By Jayakumar
17 Sep 2025, 09:52 PM
வாணியம்பாடி அருகே மேய்ச்சலில் இருந்த ஆடுகளை காரில் திருடிச்சென்ற வழக்கறிஞர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட அம்பலால் நகர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சலை. இவர் சொந்தமாக செம்மறி ஆடுகளை வளர்த்து வரும் நிலையில், கடந்த 14ஆம் தேதி அஞ்சலை அதே பகுதியில் வழக்கறிஞராக உள்ள சுல்தான் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஆடுகளை மேய்ச்சலில் விட்டிருந்தபோது ஒரு செம்மறி ஆடு காணாமல் போயியுள்ளது.

ஆடுகள் திருட்டு

அதனைத்தொடர்ந்து ஆடு காணாமல் போனது குறித்து அஞ்சலை இன்று (செப்.17) அப்பகுதி மக்களிடையே கூறியுள்ளார். இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி அஞ்சலை, ஆடுகளை மேய்ச்சலில் விட்டிருந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை அப்பகுதி மக்கள் ஆய்வு செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞரான சுல்தான் தனது நண்பரான திருமலை என்பவருடன் சேர்ந்து அஞ்சலையின் ஆட்டை காரில் திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சுல்தானை அவரது இல்லத்திலேயே சிறைபிடித்து இதுகுறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி நகர காவல்துறையினர் சுல்தான் மற்றும் அவரது நண்பரான திருமலை கைது செய்து, ஆடுகளை கொள்ளையடிக்க பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

வழக்கறிஞர் கைது

அதனைத்தொடர்ந்து இருவரும் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வரும் நிலையில், சுல்தான் காரில் ஆடுகளை திருடிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது இடத்தில் மேய்ச்சலில் இருந்த ஆடுகளை வழக்கறிஞர் தனது நண்பருடன் சேர்ந்து காரில் திருடிச்சென்ற சம்பவம் வாணியம்பாடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.